search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்"

    இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி குற்றப்பதிவு நகலை டி.டி.வி. தினகரன் பெற்றுக்கொண்டார். #TwoLeaves #TTVDhinakaran
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது.

    இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி டி.டி.வி. தினகரன் தேர்தல் கமி‌ஷனில் மனுகொடுத்தார். மேலும் சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் கைதானார். இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


    இந்த வழக்கின் நிலை குறித்து டிசம்பர் 5-ந்தேதிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி கோர்ட்டில் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகலை சம்பந்தப்பட்டவர்கள் நாளை (5-ந்தேதி) பெற்றுக்கொள்ளலாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் தினகரன் இன்றே டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டு நகலை பெற்றுக்கொண்டார்.

    இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. #TwoLeaves #TTVDhinakaran
    டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கைத்துப்பாக்கியை உருவி மிரட்டிய பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி.யின் மகனின் நீதிமன்ற காவல் இன்று மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. #AshishPandey #DelhiHyattRegency
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் பான்டே. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தம்பியான ரிட்டேஷ் பான்டே உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபையில் தற்போது உறுப்பினராக உள்ளார்.

    இந்நிலையில், லக்னோ நகரை சேர்ந்த ராகேஷ் பான்டேவின் மகனான ஆஷிஷ் பான்டே என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடிபோதையில் தனது கைத்துப்பாக்கியை உருவி ஒரு பெண் உள்பட சிலரை மிரட்டும் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைதொடர்ந்து,  இந்த வீடியோ பதிவை ஆதாரமாக வைத்து உத்தரப்பிரதேச மாநில போலீசார் லக்னோ நகரில் உள்ள ஆஷிஷ் பான்டேவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆஷிஷ் பான்டே வீட்டில்  இல்லாததால் தேடப்படும் குற்றவாளியாக அவரை டெல்லி போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் ஆஷிஷ் பான்டே சரணடைந்தார்.


    ஆஷிஷ் பான்டேவின் வழக்கறிஞர்கள் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவரை மூன்றுநாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பு வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு ஆஷிஷ் பான்டேவின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆஷிஷ் பான்டே முன்னாள் எம்.பி.யின் மகன் என்பதால் இந்த விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்க முயல்கின்றன. அவரது துப்பாக்கியை வேண்டுமானால் கோர்ட்டில் ஒப்படைத்து விடுகிறோம். அவருக்கு விசாரணை காவல் அவசியமற்றது என அவர் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 22-ம் தேதிவரை ஆஷிஷ் பான்டேவை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இந்நிலையில், இன்று ஆஷிஷ் பான்டே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படார். அவரது காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். #AshishPandey  #DelhiHyattRegency #PatialaHouseCourt #judicialcustody
    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அரவிந்த்குமார் அமர்விலிருந்து சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. #TwoLeaves
    சென்னை:

    இரட்டை இலை சின்னத்தை பெற தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் குற்ற வழக்குகள் உள்ளதால் ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் தற்போது வரை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கு ஏற்கனவே பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் அமர்வு விசாரித்து வந்தது.

    இந்தநிலையில் தினகரன் மீது தொடரப்பட்ட வழக்கு தற்போது அரவிந்த் குமார் அமர்வில் இருந்து சிறப்பு நீதிபதி பரத்வாஜ் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.

    இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #TwoLeaves
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #pchidambaram #AircelMaxisCase #CBI
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்க துறையும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.

    என்றாலும் டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் அலுவலகம், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக ஏற்கனவே கோர்ட்டில் தெரிவித்து இருந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக பலமுறை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மனை கார்த்தி சிதம்பரம் நிராகரித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் நேரில் ஆஜராவது தேவையற்றது என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் 2ஜி தொடர்பான வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் ஏர்செல் மேக்சிஸ் நிறுவனத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கான பங்குகள் குறித்து விசாரிக்க சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது.


    இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்பட்டது. இதையடுத்து தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.

    மனுவை விசாரித்த நீதிபதி ப.சிதம்பரத்தை ஜூன் 5-ந்தேதிவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்.

    ஜூன் 5-ந்தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அன்று ப.சிதம்பரம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார்.
    ×